Thula Kaveri Maahaathmyam – Part 5

0
1,876 views

srirangam tank kaveri

From the mid of October month, the holy month of Thula (Aippasi in Tamil) starts and Thula Kaveri Snanam is an important religious occasion in this month. This article describes in detail about Thula Kaveri Maahaathmyam and will be beneficial for for those who plan to take dip in Holy Kaveri during Thula and equally too to those who can offer mAnasIka prayer to the river who can’t make it personally to the river during this month. This article is written by Sri U.Ve. sArasAragnar mahAmahOpAdhyAya perukkAraNai mAdabushi chakravarthyAchArya swAmi.

அரிச்சந்திரனே, காவேரி என்னும் இந்தப் புண்ணிய நதியைப் பிரம்மா லோக க்ஷேமத்துக்காக ஏற்படுத்தினார். ஜனங்கள் எவ்வளவு பாவங்கள் செய்த போதிலும் இதில் ஸ்நானம் செய்த மாத்திரத்தில் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு உயர்ந்த உலகத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த நதியைப் பிரம்மா படைத்தார்” என்று அகஸ்திய முனிவர் கூறலானார்.

ஒரு சமயம் நாரத முனிவர் மிகவும் வேகத்துடனும் பரபரப்புடனும் ப்ரஹ்மலோகத்தை அடைந்தார். அங்கு நான்கு முகத்துடனும் வேதத்தை ஓதிக்கொண்டும் ச்ரிய:பதியான நாராயணனை மனத்தில் தியானம் செய்துகொண்டும் உலகங்களைப் படைப்பதில் ஊற்றத்தை உடையவரான ப்ரஹ்மாவை வணங்கி வழிபட்டு அவரருகில் நாரதர் நின்றார். தம்மிடம் வந்த புதல்வனான நாரதரைப் பார்த்து, “குழந்தாய், உன்னைக் கண்டதும் என் உள்ளம் மிகவும் பூரிப்படைகிறது. எப்போதும் நீ வீணையைக் கையில் வைத்துக் கொண்டு எம்பெருமாள் திருநாமங்களைப் பாடிக் கொண்டு உலகமெங்கும் திரிகிறாய். நீ இவ்வளவு பரபரப்புடன் இங்கு வந்ததை நோக்கினால் ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என நினைக்கிறாய் போலும். நீ உலகமேங்கும் ஸஞ்சாரம் செய்யும்போது ஏதோ ஓர் அதிசயத்தைக் கண்டாற் போல் உள்ளாய். அது என்ன, சொல்” என்று பிரம்மா கேட்டார்.

நாரதர், “தந்தையே, நான் ஒரு சமயம் யமலோகம் சென்றிருந்தேன். அங்கே பலர் பல விதமான சித்திரவதைகளை அநுபவித்துக்கொண்டிருந்தனர். ஓரிடமும் விடாமல் யமனது பட்டணத்தை முழுவதும் சுற்றிப் பார்த்தேன். ஜனங்கள் கூட்டங் கூட்டமாக யமபடர்களால் துன்புறுத்தப் பட்டனர். அங்கு நிற்பதற்கும் உட்காரவதற்குங்கூட இடவமில்லை. ‘இப்படி அளவற்ற ஜனங்கள் ஏன் இங்கே கஷ்டத்தை அநுபவிக்கின்றனர்?’ என்று ஆலோசித்தேன். பிறகு, ‘இவர்கள் செய்த பாவமே இதற்குக் காரணம்’ என்று எண்ணினேன். ‘பூவுலகில் நற்காரியத்தைச் செய்பவன் ஒருவனும் இல்லையா? அனைவருமே இங்கு வந்து யாதனைக்கு ஆளாகின்றனரே’ என்று யோசித்துப் பூமியை அடைந்தேன்.

“அங்கு நான்கு வர்ணத்தாரையும், நான்கு ஆச்ரமிகளையும் கண்டேன். அங்கு எவனுமே அக்கினி காரியங்களைச் செயவதில்லை. யாகங்களை அனைவரும் மறந்துவிட்டனர். சொர்ணத்தைச் சிலர் திருடுகிறார்கள். கள் பருகினவர் சிலர்; குழந்தைகளைக் கொன்றவர்கள் பலர்; ஆசார்யனிடத்தில் குற்றம் செய்தவர்கள் சிலர். இப்படிப் பாபங்கள் செய்தவர்களுடன் கலந்து பாவங்களையே செய்து பொழுது போக்குகிறவர்கள் பலர். ஸ்தாசாரம் என்பதையே உணராமல் இருப்பவர்களையும், கண்ட இடங்களில் சாப்பிடுகிறவர்களையும், நன்றி கெட்டவர்களையும், வழியல்லாத வழியில் செல்லுபவர்களையும் கணடேன். ‘ஐயோ! இப்படி இருக்கும் இவர்கள் நற்கதியை எப்படி அடைவார்கள்? பகலில் ஒரு தடவை என்றும், இரவில் ஒரு தடவை என்றும் தினத்துக்கு இருமுறை போஜனம் செய்ய வேண்டும் என்று சாஸ்த்ரம் கூறுகிறது. இவர்களோ தினமும் ஒன்பது முறை தம் இஷ்டப்படி உண்ணுகிறார்கள். புலன்களை அடக்காமல் அவை போகும் வழியில் இவர்கள் செல்லுகின்றனர். இப்படியிருக்க, காயக்லேசத்தைச் செய்து இவர்களுக்கு நற்கதி பெற விரகே இல்லையே!’ என்று மனம் வருந்தி இதை அறிவிக்க உம்மிடம் ஓடி வந்தேன்” என்றார்.

இதைக் கேட்டதும் பிரம்மா கூறலானார் – உலகில் இது செய்யத் தகுந்தது, இது செய்யத் தகாதது என்று அறிவிக்க, வேதங்களை ஸ்ரீமந்நாராயணன் எனக்குக்கொடுத்தான். இந்த வேதங்களையும் இவற்றின் பொருளையும் நன்கு உணர்வதற்கு இதிகாச புராணங்களையும் நான் வெளியிட்டேன். இவை விளக்குப் போன்றவை. இருளில் உள்ள பொருளை உணர, விளக்கு இருளை விலக்குவது போல், வேதம் முதலியவை நம் அஜ்ஞானமாகிற இருளை விலக்கி உணர்வை அளிக்கின்றன. ஆயினும் ஜனங்கள் உணர்ந்தோ உணராமலோ தீய வினைகளையே செய்கின்றனர். இவர்கள் செய்யும் பாவங்களை அநுபவிக்க இன்னமும் நரகம் படைக்க வேண்டியதாக உள்ளது. இது உண்மை.

ஆனாலும் ஒருவனுக்கு வியாதி வந்தால் அதை நீக்கும் மருந்து இருந்தே தீரும். அதுபோல் இவர்கள் செய்யும் பாவங்களைப் போக்க மருந்து ஒன்று இருக்கிறது. இந்த மருந்தை நான் முன்பு உணர்ந்தே உண்டு பண்ணியிருக்கிறேன். அந்த மருந்துதான் காவேரி நதி. தக்ஷிண கங்கை என்றும் இதைச் சொல்வதுண்டு. இது தக்ஷிண (தென் புறத்திலுள்ள) கங்கையானாலும் உத்தர கங்கையைக் காட்டிலும் உத்தரையானது (உயர்ந்தது). இதை ஸஹ்ய மலையிலிருந்து பெருகும்படி செய்தேன். இதில் ஸ்நானம் செய்பவர்கள் நற்கதியைச் சுலபமாகப் பெறுவர். எவ்வளவு அக்கிரமங்களைச் செய்த போதிலும் ஒரு நாள் ஸ்நானம் செய்த மாத்திரத்தில் அவர்களின் பாவங்கள் தொலையும். க்ஷாம கால்த்தில் அன்னத்தைக் கொடுப்பவனும், க்ஷேம காலத்தில் வேதங்களை ஓதித் தரித்திரனாக உள்ளவனுக்குச் செல்வத்தைக் கொடுப்பவனும் என்ன பயனை அடைவார்களோ அதைக் காவேரியில் ஸ்நானம் செய்பவன் சுலபமாகப் ெப்ற்றுவிடுவான்.

அதிதியைப் பூஜிக்க வேண்டும. வைச்வதேவம் செய்து அன்னத்தை உண்ண வேண்டும. நித்திய கர்மங்களினின்று வழுவாமல் இருக்க வேண்டும். ஒளபாஸனத்தைச் செய்ய வேண்டும். வேதங்களை ஓத வேண்டும். இத்தகைய ஸத்காரியங்களைச் செய்ய வேண்டும். இப்படி ஒழுக்கத்துடன் இல்லாதவன் அவசியம் நரகத்தை அடைந்து பல யாதனைகளைப் பெறுவான். மறை உரைக்கும் வழியில் செல்லாதவனும் துலா மாஸத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தால் நரகத்தை ஒரு காலும் அடைய மாட்டான்.

தினந்தோறும் காலையில் எழுந்து ஸ்நானம் முதலியவற்றைச் செய்து வேதங்களை ஓதுவதனாலும், கன்னியா மாதத்தில் மஹாலய ச்ராத்தம் செய்வதனாலும், துலாதசியில் ததீயாராதனம் செய்வதனாலும் என்ன பலன் கிடைக்குமோ அந்தப் பலனை ஒரு முறை காவேரியில் ஸ்நானம் செய்வதனால் பெற்று விடுகிறான். இப்படி உணர்ந்து காவேரியில் ஸ்நானம் செய்பவன் நரக யாதனையை ஒருகாலும் அடைய மாட்டான் என்று பிரம்மா சொன்னார்.

அகஸ்தியர் அரிச்சந்திரனை நோக்கி, “இவ்வளவு மகிமை பெற்ற காவேரியின் கதையைக் கேட்பவர்களும் அதில் ஸ்நானம் செய்பவர்களும் காவேரிக் கரையில் தானங்களைச் செய்பவர்களும் ஸர்வ பாபத்தினின்றும் விடுபட்டு நேராக வைகுண்டத்தை அடைவர். இதற்கு வேதராசி என்ற முன் சொன்ன அந்தணன் ஒருவனே உதாரணம். அவன் யமனையும் வென்று மேலுலகத்தையும் அடைந்தான்” என்றார்.

அரிச்சந்திரன், “அகஸ்திய முனிவரே, வேதராசி என்ற அந்தணரே யாமலோகம் சென்று அங்குள்ளவர்களுக்குத் தன் காவேரி ஸ்நான பலனைக் கொடுத்தும், ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைச் செய்தும் நற்கதியைக் கொடுத்தான் என்று முன்பு தேவரீர் சொன்னதைக் கேட்டு மிக ஸந்தோஷம் அடைந்தேன். யமன் என்றாலே எல்லாரும் நடுங்குவர். அப்படிப்பட்ட யமனையும் இந்த அந்தணன் வென்றான் என்றால் இது விஸ்மயத்தை அளிக்கிறது. இந்த விஷயத்தைத் தேவரீர் கூற வேண்டும்” என்றான்.

அகஸ்தியர் கூறலானார் – வேதராசி யமலோகமடைந்து எல்லாரையும் நற்கதியடையச் செய்தான். யாதனையிலிருந்து விடுபட்டு விமானம் ஏறி அனைவரும் சென்றனர். யமபடர்களுக்கு வேலையே இல்லாமற் போயிற்று. ‘நமக்கு ஊழியம் கிடைக்காமற் போகும்’ என்று எண்ணி, அவர்கள் தங்கள் யஜமானனான யமனிடம் இவ்விஷயத்தைக் கூறினர். யமனுக்கு அளவில்லாத கோபம் உண்டாயிற்று. ‘நாம் அதிபதியாக இருக்கும்போதே நம் பட்டணத்துக்கு வந்து நம் யாதனைக்குள் அடங்கியுள்ளவர்களை ஒருவன் விடுவித்தான் என்றால் அவனை நாம் ஏன் கொல்லக் கூடாது? நாம் இந்தப் பட்டணத்துக்கு அரசனாக இருந்து என்ன பயன்? இப்போதே அவனைச் சாப்பிட்டுவிடுகிறேன்’ என்று கர்ஜித்தான். யமனுடைய கோபத்தைச் சொல்லவும் வேண்டுமா? பற்களைக் கடகடவென்று கடித்துக்கொண்டும், பெரு மூச்சு விட்டுக் கொண்டும், கையால் கையைக் கசக்கிக் கொண்டும், தலையை ஆட்டிக் கொண்டும், காலதண்டத்தை எடுத்துக் கொண்டும் அவன் மிகவும் வேகமாக ஓடி வந்தான்.

பத்துத் திக்குகளும் எதிரொலித்தன, அவன் சப்தத்தைக் கேட்டு அனைவரும் கலங்கினர். ஒன்பது கிரகங்களும் பயத்தால் தங்களது தன்மையை இழந்தன. சமுத்திரங்கள் ஓட ஆரம்பித்தன. ‘இது என்ன! பிரளய காலத்தில் ஏற்படும் நெருப்புப் போல யாவரையும் கொளுத்துகிறது!’ என்று அனைவரும் அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினர். எருமையின் மேல் உடகார்ந்து வரும் யமனைப் பார்த்து நடுக்கத்துடன் எல்லா ஜனங்களும் நான்கு திசைகளிலும் ஓடினர். சைனியங்களுடன் வந்த யமனைப் பார்த்து, ‘இவன் வைவஸ்வத பட்டணத்துக்கு ராஜாவான யமன்’ என்பதை உணர்ந்து சிறிது பயந்தான் வேதராசி. ஆயினும், மனோதைரியத்தை விடாமல், ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்த்ரத்தை உரக்க உரைத்தான். விஷ்ணு கவசத்தைத் தன் உடலில் அமைத்துக்கொண்டு தன்னை ரக்ஷித்துக் கொண்டான்.

அரிச்சந்திரன், “முனிவரே, விஷ்ணுகவசம் என்றால் என்ன? அது யார் சொன்னது? அதற்கு யார் ரிஷி? தேவதை எது? அதனுடைய மஹிமை எப்படிப்பட்டது? இதைத் தேவரீர் எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

அகஸ்தியர் சொல்லலானார் – அரசே, விஷ்ணுகவசம் என்பது எல்லா மந்த்ரங்களைக் காட்டிலும் உயர்ந்தது. மிகவும் ரகசியமானது. எளிதில் வெளிப்படுத்தக் கூடியதன்று. நீ அதிக பக்தி உடையவன்; ஆகையால் நான் இதை உபதேசம் செய்கிறேன். அவதானத்துடன் கேள்.

ஸ்ரீமந்நாராயணன் உலகத்தைப் படைக்க முதலில் நாபி கமலத்தில் நான்முகனைப் படைத்தார். அப்போது இந்த விஷ்ணுகவசத்தை அவர் பிரம்மாவுக்கு தயையினால் உபதேசம் செய்தார். இந்த மந்த்ரம் பாற்கடலில் உபதேசம் செய்யப் பெற்றது. இது அநுஷ்டுப் சந்தஸ்ஸுடன் கூடியது. பிரம்மா இதற்கு ரிஷி, ஸ்ரீமந்நாராணன் தேவதை. ‘சாந்தாகாரம் புஜகஸயநம்’ என்பது இதற்கு த்யான ச்லோகம். ஸ்ரீவிஷ்ணுகவசம் எல்லா மங்களங்களையும் கொடுக்கக் கூடியது. இதை ஜபிப்பவன் எல்லா வகைத் துன்பங்களினின்றும் விடுபடுவான். இந்த மந்த்ரத்தைச் சொல்லித் தன் உடலில் கவசம் அமைத்துக் கொண்டான் வேதராசி.

இப்படி நாராணனை மனத்தில் தியானம் செய்து, விஷ்ணு கவசத்தைத் தன் உடலில் அமைத்துக் கொண்ட இவனை யமனுடைய படர்கள் பார்த்து அச்சமடைந்து நடுநடுங்கி நான்கு திக்குகளிலும் ஓடலாயினர்.

விஷ்ணுவினிடத்தில் மனம் செலுத்தியவனும், புலன்களை வென்றவனுமான வேதராசியைப் பார்த்து யமன் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கிப் புகழந்தான். வேதராசி, முன்பு கழுதையின் மேலேறிக் காலதண்டத்தை ஏந்தி பயங்கர ரூபத்துடன் வந்த யமனை, இப்போது தேரில் இருப்பவனாகவும் அழகிய உருவத்துடன் இருப்பவனாகவும் கண்டான். தேரிலிருந்து யமன் இறங்கி ஸ்வாகதம் கூறி, அர்க்யம், பாத்தியும் முதலியவற்றைக் கொடுத்து வேதராசியைப் போற்றினான். “எம்பெருமானை தியானம் செய்யும் தேவரீருடைய வரவு நல்வரவாகுக. நான் மிகவும் தன்யனானேன். தேவரீரால் அநுக்கிரகிக்கப் பெற்றேன். என் பிறப்பு இன்று ஸபலமாயிற்று. தேவரீர் திருவடி தாமரையின் தூள் என் பட்டணத்தில் பட்டபடியால் இது பாவனமாயிற்று. தேவரீர் என்னை குளிர கடாக்ஷிக்க வேண்டும்” என்று வேண்டினான்.

“உலகில் மக்கள் அவரவர் செய்யும் பாவங்களை அநுபவிக்க நரகம் படைக்கப்பட்டுள்ளது. இங்கே பாவிகள் தள்ளப்படுகிறார்கள். இரவும் பகலும் இங்கே கொளுத்தப்பட்டு சிக்ஷிக்கப்படுகின்றனர். உயர்ந்த பிராம்மணரே, பாவம் செய்த ஜனங்கள் இவ்வுலகத்தை அவசியம் அடைந்தே தீருவர். எவ்வளவு பாவம் செய்தபோதிலும் இங்கு வராமலிருப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. ஹரிநாம ஸங்கீர்த்தனத்தையும் துலா காவேரியில் ஸ்நானத்தையும் எவன் செய்கிறானோ அவனுடைய பாவம் நீங்கும். அவனுடைய பாவம் அவனை இங்கே தள்ளாது. ஸர்வ பாபங்களுக்கும் ஹரிநாம கீர்த்தனமும் காவேரி ஸ்நானமும் பிராயச்சித்தம் ஆகின்றன. பிறர் துன்பத்தைப் பொறுக்காதவர் தேவரீர். ஒருவன் கஷ்டப்படும்போது ‘ஐயோ!’ என்று எவன் அவனுடைய கஷ்டத்தை நினைத்து வருந்துகிறானோ அவனே உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவன். எவனோருவன் பிறன் கஷ்டத்தைப் பார்த்து, ‘இவ்வளவையும் இவன் அநுபவிக்க வேண்டும், மேலும் இவன் கஷ்டத்தை அடைய வேண்டும்’ என்று எண்ணுகிறானோ அவன் எம்பெருமானிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாதவன். தேவரீரோ நரகத்தில் யாதனைகளை அநுபவிப்பவர்களைப் பார்த்து ‘ஐயோ’ என்று இரங்கி, ஹரிநாமத்தைச் சொல்லி அவர்களுக்கு நற்கதியை அளித்தீர்” என்று யமன் வேதராசியைப் புகழ்ந்து, அவர் காலில் வணங்கி, “மருந்து போன்ற க்ருஷ்ணநாம கீர்த்தனத்தை இனி இங்கே சொல்லாமல் இருந்து என்னை அநுக்கிரகிக்க வேண்டும். என் ராஜ்யம் நிலைக்க வேண்டும். என் ஆதிபத்தியம் அழியாமலிருக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.

வேதராசி, “யமதர்மராஜனே, நீர் முதலில் எனக்குப் பயங்கர உருவத்துடன் காட்சி அளித்தீர். பிறகு அழகிய உருவத்துடன் காட்சி தந்தீர். இதற்கு காரணம் என்ன?” என்று கேட்டான்.

யமன் கூறலானான் – பாவிகளை தண்டிப்பதற்காகக் கடவுள் யமலேகத்தைப் படைத்துள்ளான். அதற்கு என்னை அதிபதியாக்கியுள்ளான். அத்துடன் இரண்டு உருவங்களையும் கொடுத்துள்ளான்., பாவம் செய்தவனுக்கு பயங்கரக் காட்சியையும், புண்ணியம் செய்தவனுக்கு அழகிய உருவத்தில் காட்சியையும் அளிப்பேன். நீர் ஏதோ சிறிய பாவம் செய்திருந்தபடியால் முதலில் அம்மாதிரியான பயங்கர ரூபத்தில் என்னைப் பார்த்தீர். எவனோருவன் துலா காவேரியில் ஸ்நானம் செய்கிறானோ, காவேரிக் கரையில் தானங்கள் செய்கிறானோ, அங்கே உட்கார்ந்து வேதங்களை ஓதுகிறானோ, அவன் முன்பு எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அந்தப் பாபங்கள் அவனிடத்திலிருந்து விலகிவிடும். அத்தகையவனுக்கு என் பயங்கரக் காட்சி மின்னல்போல் மின்னி மறைந்துவிடும். பிறகு என் அழகிய ரூபத்தைக் காண்பான். நீரும் காவேரிக் கரையில் வாசம் செய்து அங்கே ஸ்நானம் முதலியவற்றை செய்தபடியால் இப்போது என் அழகிய ரூபத்தையும் கண்டீர்.

எவன் காவேரியில் ஸ்நானம் செய்யவில்லையோ, காவேரியின் மஹிமையைக் கேட்கவில்லையோ, ஸத்பாத்திரங்களில் தன் திரவியத்தைதானம் செய்யவில்லையோ, கிருஷ்ணனின் குணசேஷ்டிதங்களைச் சொல்லவில்லையோ, ஹரிநாம கீர்த்தனத்தை செய்யவில்லையோ, அத்தகையவனுக்கு நான் உக்கிரமாகவே இருப்பேன். நீர் உயர்ந்த புண்ணியங்களைச் செய்தபடியாலும், காவேரியில் துலா மாதத்தில் ஸ்நானம் செய்தபடியாலும், கோடி ஸூர்யர்களுக்கு சமமான ஒளியையுடைய இதோ நிற்கும் விமானத்தில் ஏறிக் கொள்ளும். உமது விருப்பப்படி மேலுள்ள எல்லா உலகங்களையும் விஷ்ணுலோகத்தை அடைவீர் என்று யமன் சொன்னான்.

உடனே வேதராசி விமானத்தில் ஏறிக்கொண்டான். தேவதைகள் அனைவரும் புஷ்பமாரி பொழிந்தனர். கந்தர்வர், கின்னரர்கள் பாட ஆரம்பித்தனர். அப்ஸர ஸ்திரீகள் நடனமாடினர். விமானத்திலுள்ள வேதராசியை எல்லா தேவதைகளும் புகழ்ந்தனர். ஆங்காங்கே பால் பழம் உயர்ந்த வஸ்த்ரம் முதலியற்றை கொடுத்து உபசரித்தனர். பிறகு அவன் வைகுண்ட லோகத்தை அடைந்தான். ஹரிச்சந்திரனே, காவேரியின் மஹிமையால் இந்த அந்தணன் யமலோகம் சென்று, யமனையும் வென்று, அவனால் புகழப்பெற்று விமானமேறி உயர்ந்த உலகத்தை அடைந்தான். ஆகையால் இதன் மஹிமை அளவிடற்கரியது என்று அகஸ்தியர் சொன்னார்.

யமன் தன் சைன்யங்களைச் சமாதானப் படுத்தி, வேதராசியின் மஹிமையையும், காவேரியின் பிரபாவத்தையும் சொல்லிக் கொண்டு தன் இருப்பிடம்போய் சேர்ந்தான். ஆகையால் அரிச்சந்திரனே, நீயும் காவேரியில் துலா மாதத்தில் ஸ்நானம் செய். உயர்ந்த பொருள்களைக் கொடு. காவேரியின் மஹிமையைக் கேள். பணத்தைப் பொருட்படுத்தாமல் இவிவிஷயத்தில் செலவு செய். எல்லா விதமான நன்மைகளையும் நீ பெறுவாய். இந்த வேதராசியின் உபாக்கியானமே எல்லாப் பாவங்களையும் போக்கும். ஐச்வரிய ஆரோக்ய புத்திகளை அளிக்கும். இது உண்மை என்று அகஸ்தியர் கூறி முடித்தார்.

To be continued…

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here