சிங்கப்பூர் : சிங்கப்பூர், சிராங்கூன் சாலை அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் ஜெயந்திப் பெருவிழா நவம்பர் 24ம் தேதி லட்சார்ச்சனையுடன் துவங்கியது. நாள்தோறும் டிசம்பர் 24ம் தேதி வரை ஹோமமும் சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றன. ஜெயந்தி நாளான 24ம் தேதியன்று அதிகாலை விஸ்வரூப தரிசனமும் தனுர் மாத பூஜையுடன் விழாத் துவங்கியது. காலை 6.30 மணி முதல் 9 மணி வரை சிறப்பு ஹோமம், விசேஷத் திருமஞ்சனம் நடைபெற்று, புனித கடம் ஆலயம் வலம் வரப்பெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது, கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. காலை 11 மணிக்கு விசேஷ ஆராதனையும், சிறப்பு வடை மாலை அர்ச்சனையும் துவங்கி, உச்சி கால பூஜையுடன் முற்பகல் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மாலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட சிறப்பு வடை மாலை அர்ச்சனை நடைபெற்றது. விசேஷ ஆராதனைக்குப் பிறகு சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.