Dhruva Charitram

0
798 views

The following article on Dhruva Charitram is by Sri Raghuveeradayal Swami as published in his blog thiruthiru.wordpress.com.

துருவ சரித்திரம்
மனுகுலத்தார் தங்கள் கோவாக, எல்லைஇல் சீர்அரசன்தன் மகனாய்த்தோன்றி, நாட்டிற்பிறந்து படாதனபட்டு, மாற்றுத்தாயான கூற்றுத்தாய் சொல்ல கொடிய வனம் போன சீற்றமிலாதான் “அம்மான் ஆதிப்பிரான்! அவன் எவ்விடத்தான் யான்ஆர்? ஆவார் ஆர்துணை? நோற்று நோன்புஇலேன், ஒன்று அட்டகில்லேன், ஐம்புலன் வெல்லகில்லேன், கடவன்ஆகி காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன், எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே! நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் நான் அலப்புஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன், தொழுவனே திருமாலே! தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாவே, உனக்கு ஆள்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? உண்ணும் சோறு பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றே கண்கள் நீர்மல்கி, மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவி, மாணி அல்லும் பகலும் நெடுமால் என்று அழைத்து ஒல்கி ஒல்கி நடந்து கசிந்த நெஞ்சொடு, வைத்தமாநிதியாம் மதுசூதனையே அலற்றிப்போய், மந்திரம் கொள் மறை முனிவன், என் அப்பன் நான்முகன் தான்முகமாய் படைத்த முனிவன், அருள்பெற்று, தொல்நகரம் துறந்து, துறைக்கங்கைதன்னைக் கடந்து வனம் போய் புக்கு;

ஈற்றுத்தாய் இரங்கல்
ஈற்றுத்தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ கடிய வெங்கானிடை கால்அடி நோவ போக்கினேன்; ஏவலார்குழல் என் மகன் தாலோத் திருவினையில்லாத் தாயரிற்கடை ஆயினதாய்; அந்தோ கெடுவேன் கெடுவேனே நெடுங்கானம் போகு என்ற அரும்பாவி சொற்கேட்டு விரைந்து எவ்வாறு நடந்தனை? என் செய்கேனே! வா, போ, வா இன்னம் வந்து ஒருகாற்கண்டு போ! கற்றுத்தூணியுடை வேடர் கானிடைப் போக்கினேன்! எல்லே பாவமே! தகவிலை தகவிலையே நீ போக்கு! ஓரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ! நீ அகன்றால் வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால்! அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வச்சொல் கேளாதே! அணிசேர் மார்வம் என் மார்வத்திடை அழுந்த தழுவாதே, முழுசாதே, மோவாது உச்சி, கைமம்மாவின் நடை அன்ன மென்நடையும், கமலம்போல் முகமும் காணாது எம்மானை, என் மகனை இழந்திட்ட பாவியேன், எனது ஆவி நில்லாதே! நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழுபிறப்பும்! மனுக்குலத்தார் தங்கள் குலத்துக்கு ஓர் மணிவிளக்கே!

தந்தை புலம்பல்
வல்வினையேன் மனம் உருகும் மகனே இன்றும் நீ போக என் நெஞ்சம் இருபிவாய்ப் போகாதே நிற்குமாறே! விரும்பாத கான் விரும்பி, வெயில் உறைப்ப, பொருந்தார் கைவேல்நுதிபோல் பரல்பாய் மெல்லடிகள் குருதி சோர, வெம்பசி நோய் கூற இன்று போகின்றாய்! அந்தோ!யானே என் செய்கேன் அருவினையேன் என் செய்கேனே, யாவரும் துணை இல்லை, துயரும் நினைஇலை வேம்உயிர் அழல்மெழுகில் உக்கு நீபோய் அவத்தங்கள் விளையும் இழிதகையேன் இருக்கின்றேனே.

துருவன் துதிப்பது
என்று நின்றே திகழும் செய்ய நன்சுடர் விண்மீன்னாய்! என்றும் எப்போதும் என் நெஞ்சந் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரானே! ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப்பல நாள், உகம்தோறும் உயிர்கள் காப்பானே! கோலத்திருமகளோடு உன்னைக் கூடாதே சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ!தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்குஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனே! தீங்கரும்பின் தேனை, நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே! காதல் செய்து என் உள்ளம் கொள்ளை கொண்ட கள்வனே!உண்ணாது வெம்கூற்றம் ஏலாத பாவங்கள் சேரா! வெள்ளத்து ஓர் ஆலிலைமேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார், நந்தா நெடுநரகத்துடை நணுகாவகை அருள்புரியே!

பகவான் வரம்
என் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின்!ஊழிதோறு ஊழிஓவாது வாழிய! திருவொடு மருவிய பெருவிரல் உலகம் கொள்வாய்! கார் ஆர் புரவி ஏழ்பூண்ட தனி ஆழித்தேர் ஆர்நிறை கதிரோன், மண்டலத்தைக் கீண்டு புக்கு, துன்னிய தாரகையின் பேர் தனி சேர் ஆகாசம் என்றும் விதானத்தின் தெய்வச் சுடர் நடுவுள் ஆர்ந்த ஞானச்சுடர் ஆகி, வாட்டம் இல்புகழ், தனிநின்ற ஏழ் உலகும் தனிக்கோல் செய்ய வாழ்மின்! போர்த்த பிறப்பொடு, நோயொடு, மூப்பொடு, இறப்பு இவை பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி என் தாளின் கீழ்ச்சேர்ந்து சேமத்தை அடைவாய்; தேசம் திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் புகழ் தாள் அது காட்டித் தந்தான் மாயவன். அகலகில்லேன் இறையுமென்று அருள்செய்தான் அண்ணல் அங்கண் நெடுமதில் புடைசூழ் அணிநகரத்து அரசு எய்தி இனிது வீற்றிருந்து, சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சிலநாள் செலிஇக்கழிந்த, தன் தாமம் மேவி உலகு அனைத்தும் விளக்கும் சோதிசூழ் விசும்பணி முகில் தூரியம் முழங்கின. ஆழ்கடல் அலைதிரைக் கைவிடுத்து ஆடின. நல் நீர் முகில் பூரண பொற்குடம் பூரித்தது. உயர்விண்ணில் நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன. நெடுவரைத் தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர். உலகர்கள் தூபநல் மலர் மழை சொரிந்தனர். எழுமின் என்று இருமருங்கும் இசைந்நனர். முனிவர்கள்,வழிஇது என்று எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர். கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர். அதிர்குரல் முரசங்கள் அலைகடல் முழக்கு ஒத்த; மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் வேதநல் வாயவர் வேள்வி உள்மடுத்தே; விரைகமழ் நறும்புகை காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்; ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாள்ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே. மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர். வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்; நிதியும் நற்கண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுக மடந்தையர் ஏந்தினர் வந்தே; வந்து அவர் எதிர்கொள்ள அந்தம் இல் பேரின்பத்தோடு இருந்தமை சொல் சந்தங்கள் சொல்வல்லார் முனிவரே.

நின்னையே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்; நின்னையேதான் வேண்டி நிற்பன் அடியனே.

வாய் அவனை அல்லது வாழ்த்தாது
கை உலகம் தாயவனை அல்லது தாம்தொழா
அவன் உருவொடு பேர்அல்லால் காணா கண் கேளா செவி

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here