Upastaanam- Part 3

0
977 views
Upastanam

This is a wonderful article written by Dr. P.V. Satakopa Tatacharya Swamy about Upastaanam, based on the quotes from Vedas.

வேதத்தில் பலவிதமான தேவதைகளை குறித்து பலவிதமான ஹோமங்களும் உபஸ்தான மந்த்ரங்களும்  கூறப்பட்டுள்ளன. உபஸ்தானம் என்பது கர்மாவின் முடிவில் செய்யும் ப்ரார்த்தனா ரூபமாகும் என்றும் அக்னியின் விஷயமான உபஸ்தாநத்தையும் முன்பு குறிப்பிட்டிருந்தேன்.அந்த க்ரமத்தில் ஆதித்யனைக்குறித்துள்ள உபஸ்தான மந்த்ரங்களை குறிப்பிடுகிறேன்.
1.உத்யந்நத்ய மித்ரமஹஃ. ஸபத்நாந் மே அநீநசஃ.
திவைநாந் வித்யுதா ஜஹி. நிம்ரோசந் அதராந் க்ருதி.
ஹே மித்ரமஹஃ— அனுகூலமானதேஜஸ்ஸுடன் கூடிய ஆதித்யனே. த்வமுத்யன்–—நீ காலையில் உதிப்பவனாய், இந்த பகலிலேயே என்னுடைய எதிரியை-சத்ருவை. அநீநசஃ— நாசம் செய்வாயாக. அதாவது, திவைநாந் வித்யுதா ஜஹி— பகலில் உக்ரமான தேஜஸ்ஸால் நாசம் செய்வாயாக. நிம்ரோசன் அதரான் க்ருதி— அஸ்தமித்த பிறகு இரவில் இருட்டால் அவர்களை உபத்ரவிப்பாயாக.
2.உத்யந்நத்ய வி நோ பஜ. பிதா புத்ரேப்யோ யதா.
தீர்காயுத்வஸ்ய ஹேசிஷே. தஸ்ய நோ தேஹி ஸூர்ய.
ஹே ஸூர்ய அத்ய உத்யந்—இன்று உதிப்பவனாய் நீ .நஃ—எங்களுக்கு. விபஜ- பணத்தை . பிதா புத்ரேப்யோ யதா – லோகத்தில் தகப்பனானவன் தன் பிள்ளைகளுக்கு தனித்தனியாக பாகத்தை பிரித்து கொடுப்பது போல் கொடுப்பாயாக. தீர்காயுத்வஸ்ய ஹேசிஷே—நீண்ட ஆயுளைத்தர ஸாமர்த்ய முள்ளவனாகிறாய். நஃ—எங்களின் பொருட்டு. நீண்டஆயுளுடன் இருக்கும் தன்மையை. தேஹி—அருள்வாயாக.
3. உத்யந்நத்யமித்ரமஹஃ. ஆரோஹந்நுத்தராம் திவம்.
ஹ்ருத்தரோகம் மம ஸூர்ய. ஹரிமாணம் ச நாசய.
ஹே மித்ரமஹஃ— அனுகூலமானதேஜஸ்ஸுடன் கூடிய ஸூர்ய-ஆதித்யனே. த்வமுத்யன்–—நீ காலையில் உதிப்பவனாய். உத்தராம் திவம் ஆரோஹன்—உத்க்ருஷ்டமான த்யுலோகத்தை ஏறுபவனாய் ,மம—என்னுடைய. ஹ்ருத்தோரகம்—மனோ வ்யாதியை. ஹரிமாணம் ச—சோகத்தால் சரீரத்தில் உண்டாகும் கெட்டரூபத்தை- பச்சைவர்ணத்தை. நாசய- நாசம் செய்வாயாக.
4.சுகேஷு மே ஹரிமாணம். ரோபணாகாஸு தத்மஸி.
அதோ ஹாரித்ரவேஷு மே. ஹரிமாணம் நிதத்தமஸி.
மே- என்னுடைய. ஹரிமாணம்—வ்யாதியால் உண்டான பச்சைவர்ணத்தை. ரோபணாகாஸு சுகேஷு—பெண்ஜாதியான கிளியிடத்தில் . தத்மஸி- இருக்கச்செய்வோம். அவைகளல்லவா  பச்சவர்ணத்தை விரும்புகின்றன. அதோ ஹாரித்ரவேஷு—மேலும் பச்சைமரங்களில், மே- என்னுடைய. ஹரிமாணம்—பச்சைவர்ணத்தை. நிதத்ம்ஸி—நிச்சயமாக இருக்கச்செய்வோம்.
5,உதகாதயமாதித்யஃ. விச்வேந ஸஹஸா ஸஹ.
த்விஷந்தம் மம ரந்தயந். மோ அஹம் த்விஷதோ ரதம்.
அயமாதித்யஃ— இந்த ஸூர்யன். விச்வேந ஸஹஸா ஸஹ—எல்லாவிதமான பலத்துடன் கூடியவனாய். மம த்விஷந்தம் ரந்தயந்—என்னுடைய சத்ருவை  ஹிம்ஸித்துக்கொண்டு. உதகாத்—- உதயமானான். இவனுடைய அனுக்ரஹத்தால். அஹம்—நான். த்விஷதஃ— சத்ருவில் நின்றும். மோ ரதம்–ஹிம்ஸையை  அடையக்கூடாது.
6. யோ நச்சபாதசபதஃ. யச்ச நச்சபதச்சபாத்.
உஷாச்ச தஸ்மை நிம்ருக்ச. ஸர்வம் பாபம் ஸமூஹதாம்.
அசபத­ஃ— தோஷமேதும் செய்யாமல் —நிந்தைசெய்யாமல் இருக்கும். நஃ—- எங்களை. யஃ— யாதொருசத்ருவானவன்.. சபாத்.—- நிந்திக்கிறோனோ.யச்ச நஃசபதஃ –யாதொருவன் தவறு செய்யும்போது அவனை கண்டனம் செய்கிற எங்களை. சபாத்–  திருப்பி நிந்திக்கிறானோ. தஸ்மை–அவனின் பொருட்டு. உஷாச்ச நிம்ருக் ச— உதயாஸ்தமன தேவதைகளான அஹோராத்ர தேவதைகள். ஸர்வம் பாபம்— எங்களுடைய பாபத்தின் கூட்டத்தை. ஸமூஹதாம்— சேர்த்து கொடுக்கட்டும்.
தோஷமேதும் கூறாத எங்களை யாவனொருவன் நிந்திக்கிறானோ, அவனிடம், அஹோராத்ர தேவதை, எங்களுடைய பாபத்தை மூட்டையாக சேர்த்து கொடுக்கட்டும் என திரண்ட பொருள். என்ன ஆச்சர்யமான ப்ரார்த்தனை.
 
ஆஹவனீயத்தின் உபஸ்தானத்தில் மந்த்ரம்.
1.       யோ நச்சபத்நோ யோ ரணஃ. மர்தோபிதாஸதி தேவாஃ..
இத்மஸ்யேவ ப்ரக்ஷாயதஃ. மா தஸ்யோச்சேஷி கிம்சந.
தேவதைகளே. யாவனொருவன் எங்களுக்கு சத்ருவாக இருந்து எங்களுக்கு அநிஷ்டத்தை சிந்திக்கிறானோ. யாவனொருவன்  எங்களுடன் சண்டையிட எண்ணி   எங்களை நிந்திக்கிறானோ, இவர்களுடைய பணத்தை ,ஜ்வலிக்கிற நெருப்பில்  இட்ட மரத்தைப்போல் மீதமில்லாமல் நாசம் செய்வாயாக.
 
 
இவ்விதம் சத்ருக்களின் உபத்ரவத்தை நீக்க அனேகம் மந்த்ரங்கள் உள்ளன.
 
இந்த்ராக்னிகளின் புரோடாசத்தை அபிமந்த்ரணம் செய்யும் மந்த்ரம்.
 
யோ நஃ கநீய இஹ காமயாதை. அஸ்மின்  யக்ஞே யஜமநாய மஹ்யம். அபதமிந்த்ராக்னீ புவநாத் நுதேதாம். அஹம் ப்ரஜாம் வீரவதீம் விதேய.
 
யாதொரு சத்ருவானவன், நாங்களனுஷ்டிக்கும்  இந்த  கர்மாவில் அனுஷ்டானத்தில் மிகுந்த அளவு குறைவு ஏற்படுவதையும்,அதடியாக எங்களுக்கு பலன் ஏதும் கிடைக்காமலிருக்கும்படியையும் விரும்புகிறானோ,அப்படிப்பட்ட சத்ருவை இந்த்ராக்னிதேவதை எல்லா லோகத்தில் நின்றும் வெளியே அகற்றவேணும். இந்த தேவதையின் அனுக்ரஹத்தால் நான் மிகுந்த ஸாமர்த்யமுள்ள வேலைக்காரர்களுடன், நல்ல புத்ராதிரூபமான ப்ரஜையை அடையக்கடவேன்.
நமது ஸம்ப்ரதாயப்ரகாரம் இந்த்ர, அக்னி பதங்கள் எம்பெருமானையே குறிக்கும் என்பதால்  அவரது யாகரூபமான ஆராதனத்தில்  குறைவு ஏற்படும்படி சிந்திப்பவன் நமக்கு சத்ருவாகிறான். அவனை எம்பெருமான் தண்டிக்கும்படி ப்ரார்த்திப்பதாக இந்த மந்த்ரம் அமைந்ததாகத்தோன்றுகிறது.
 
 
 தர்சபூர்ணமாஸத்தில் முதலாவதான பூர்ணமாஸத்தில் மூன்று யாகங்கள் உள்ளன.அவைகளில் முதலில் அக்நியானவர் தேவதை . நடுவில் உபாம்சுயாகத்துக்கு, ப்ரஜாபதி, விஷ்ணு,அக்னீஸோமௌ என தேவதைகளை விகல்பித்துள்ளார்கள். மூன்றாவதாக அக்னீஷோமர்கள் தேவதைகள்.   இங்கு இரண்டாவதான  உபாம்சு யாகத்தில்  ஹோமம் செய்த பிறகு வரும்  மந்த்ரம் “தப்திரஸி அதப்தோ பூயாஸம் அமும் தபேயம்”. என .உபாம்சுயாகத்தின் தேவதையே, நீ எங்களின் த்வேஷியை —-சத்ருவை ஹிம்ஸிப்பவனாகிறாய். உன்னுடைய அனுக்ரஹத்தால் நான் சத்ருக்களால்- எதிரிகளால் ஹிம்ஸிக்கப்படாதவனாக ஆவேன். சத்ருவை கொல்லக்கடவேன் என பொருள்.
 
இங்கு ஓர் ஸந்தேஹம் எழும். அதாவது  உபாம்சு யாகம் செய்து சத்ருவை கொல்லத்தகுந்தவனானால்,யஜமானன் ஜீவனை ஹிம்ஸிப்பதால் இந்த பூர்ணமாஸமும் அபிசாரயாகமாகுமே. அபிசாரயாகம் செய்தால் சத்ருவின் நாசம் ஏற்படும், ஆயினும் கொல்வதால் வரும் பாபம் போகாது என்பதால் அதை செய்யக்கூடாது என்பதாக சாஸ்த்ரம் இருக்கிறதே என.
ஸமாதானம்— அமும்  தபேயம் என்பது ,யஜமானன் யாவனொருவனை த்வேஷிக்கிறானோ அவனை ஸ்மரிக்க வேணுமென்பதால் யஜமானன் தேவதத்தன் போலுள்ள மனிதனை சத்ருவாக த்வேஷித்தால் அவனை கொல்வதால் இது அபிசாரயாகமாகும். அவ்விதம் மனிதர்களை சத்ருவாக ஸ்மரிக்காமல் தனது பாபத்தையே சத்ருவாக நினைத்தால் பாபமே நாசத்தை அடையும். பாபத்தின் பயனாகவே தேவதத்தன்   என்பவன் சத்ருவாகிறான். நமது பாபம் கழிந்தால் அவன் சத்ருவாக காரணமில்லாததால்  அவன் சத்ருவாக ஆகிறதில்லை. அதடியாக அவனுடைய தொல்லையும் ஒழியும்.அவனை கொல்லாததால் நமக்கு பாபமும் வராது என.
 
இந்த க்ரமத்தில் அச்சித்ரத்தில் வரும் சத்ருவின் நாசத்தில் கூறப்பட்ட மந்த்ரங்களையும்  நாம் நமது பாபத்தையே  சத்ருவாக ஸ்மரித்து ஓதினால் நமது பாபமே நாசத்தை அடையும். அதடியாக புதியதாக பாபம் ஏதும் வாராது என்பதாக கூறலாம்.
 
இதையே நமது ஸம்ப்ரதாயத்தில்  ஒரு வஸ்து ஒருவனுக்கு அப்ரியமாகவும், மற்றவனுக்கு ப்ரியமாகவும் ஆவதால் வஸ்துவுக்கு நியதஸ்வபாவமில்லை. அவைகள் அவரவர்களின் கர்மாணுகுணாமாக அமையும் என்பதாக உள்ளது.
 
அநேகவிதமான ப்ரார்த்தனா ரூபத்திலான மந்த்ரங்களுடன் கூடியது அச்சித்ரம் எனும் வேதபாகம் .இந்த பாகம் மூன்றாவது அஷ்டத்தில் ஏழாம் ப்ரச்நத்தில் உள்ளது .உயர்ந்த ப்ரார்த்தனைகளுடன் கூடிய இந்த பாகத்தை, ப்ரதி ஏகாதசி தினம் அச்சித்ராச்வமேத   பாராயணம் செய்வது என பலர் செய்துவருகிறார்கள்,
 
 இந்த க்ரமத்தில் காஞ்சியில் நம்மத்திகிரித்திருமாலுக்கு  ப்ரதி ஏகாதசி தினம்  அச்சித்ராச்வமேத பாராயணம் செய்வது வழக்கம். கடந்த 13-11-2013 ஸாயம் புறப்பாட்டில் மறையாளர்கள் விண்ணப்பிக்க உபக்ரமித்த பாகம் –
இதமஸ்ய சித்தமதரம் த்ருவாயாஃ என.
 
யாதொரு சத்ருவானவன்,  மனதால் எனக்கு துர்மரணத்தை விரும்புகிறவனாய் எனக்கு சத்ருவாக இருக்க எண்ணுகிறானோ.ஹே அக்னியே, பலவிதமாக ஹிம்ஸிக்கிற இவனுடைய எண்ணம் நாசமடையட்டும். நான் மேலாக இருக்கக்கடவேன். என்னுடைய சத்ருவானவன் நிக்ருஷ்டனாகட்டும் என.
முடிவில் வந்த பாகம்.
त्वन्नो अग्ने सत्वं नो अग्ने त्वमग्ने अयासि। என.
இனி  வைகுண்டைகாதசி தினம் மீண்டும் புதியதாக அச்சித்ரத்தை உபக்ரமிப்பார்கள்.
 
அதன் பொருளை ஆஸ்திகர்கள்  அறிந்தால் அவர்களுக்கு இந்த பாகத்தையாவது அத்யயனம் செய்ய வேணும் என்ற எண்ணம் வரும் என்பதால்  சில  பொருள்களை தாஸனுக்கு கிட்டிய சிறிய சக்தியை கொண்டு ஆசார்யர்களின் அனுக்ரஹத்துடன்  வி்ஞ்ஞாபிக்கிறேன். தோஷங்களை க்ஷமிக்கவும்.
 
यद्देवा देवहेडनं । देवासस्चकृमा वयम्। आदित्यास्तस्मान्मामु़ञ्चत। ऋतस्यर्तेन मामुत।।
 
1 அதிதியின் புத்ரர்களான தேவதைகளே, நாங்கள் தேவதைகளுக்கு கோபத்தை உண்டுபண்ணுகிற  எந்த கார்யத்தை செய்தோமோ, அப்படிப்பட்ட அபராதத்தில் நின்றும் என்னை நீங்கள் விடுவிக்கவேணும், மேலும் யாகஸம்பந்தமாக இந்த ஹோமத்தாலும் விடுவிக்கவேணும்,
 
देवा जीवनकाम्या यत्। वाचानृतमूदिम। अग्निर्मा तस्मादेनसः। गार्हपत्यः प्रमुञ्चतु। दुरिता यानि चकृम। करोतु मामनेनसम्।।
 
2. ஹே தேவதைகளே,எங்களுடய ஜீவனத்தை விரும்பி  வாயினால்  எந்த பொய்யை கூறினோமோ,அதாவது உத்யோகத்தில்  அதிகாரிகளுக்கு ப்ரியத்தை கூற நினைத்து நிறையபொய்யை கூறினோம், அப்படி பொய்யை பேசுவதால்  உண்டான பாபத்தின் நின்றும் கார்ஹபத்யன் என்கிற  அக்னிதேவன் என்னை விடுவிக்கட்டும், இதுபோல் மற்றும் உள்ள பாபத்தில்  நின்றும் என்னை
விடுவித்து  பாபமில்லாதவனாகச்செய்யட்டும்.
 
ऋतेन द्यावापृथिवी। ऋतेन त्वं सरस्वति। ऋतान्मामुञ्चतांहसः.। यदन्यकृतमारिम।।
 
3.ஹே த்யாவாப்ருதிவி லோகங்களே, ஹே ஸரஸ்வதி, குறையுடன் கூடின யாகத்தால்  எந்த பாபம் என்னை அடைந்ததோ அந்த பாபத்தில் நின்றும் என்னை விடுவிக்கவேணும், மேலும் வேறுவழியில் எந்த பாபத்தை செய்தோமோ, அதில் நின்றும் விடுவிக்கவேணும்,
 
सजातशंसादुत वा जामि शंसात्। ज्यायसश्शंसादुत वा कनीयसः। अनाज्ञातं देवकृतं यदेऩः। तस्मात्त्वमस्माज्जातवेदो मुमुग्धि।।
4.ஞாதிகள்,நண்பர்கள், பெண்டாட்டி,தமையன் தம்பி இவர்களின் ப்ரஸம்சையினால் கர்வமடைந்த  என்னால்  என்னிஷ்டப்படி  தேவர்கள் விஷயத்தில் தெரியாமல் நிறைய  பாபம் ஸ்மபாதிக்கப்பட்டுள்ளது, ஹே ஜாதவேதனான அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,
यद्वाचा यन्मनसा। बाहुभ्यामूरुभ्यामष्ठीवद्भ्यां। शिश्नैर्यदनृतं चकृमा वयम्। अग्निर्मा तस्मादेनसः।
5. வாக்கு மனஸ்,கைகள் தொடைகள் முட்டிகள் மற்றும் புருஷ இந்த்ரியங்களால் லோகவிருத்தமாயும் வேதவிருத்தமாயும் உள்ள வ்யாபாரங்களை- க்ரியைகளை செய்துள்ளோம், அக்னிதேவன் இந்த
பாபத்தில்  நின்றும் என்னை விடுவித்து  பாபமில்லாதவனாகச்செய்யட்டும்.
 
यद्धस्ताभ्यां चकर किल्बिषाणि। अक्षाणां वग्नुमुपजिघ्नमानः।दूरे पश्या च राष्ट्रभृच्च। तान्यफ्सरसावनुदत्तामृणानि।।
6.அயலாரின் த்ரவ்யங்களை எனது கைகளினால் அபகரித்துள்ளேன்
காணத்தகாததை கண்களால்  காண்பதாகிற பாபத்தை செய்துள்ளேன், இம்மாதிரியான பாபங்களை தூரே பச்யா என்றும், ராஷ்ட்ரப்ருத் என்கிற பெயருள்ள அப்ஸரஸ்ஸுகள் எங்களிடம் இல்லாமல்  செய்யட்டும்..
 
अदीव्यन्नृणं  यदहं चकार। यद्वादास्यन् संजगारा जनेभ्यः। अग्निर्मा तस्मादेनसः।
 
7.நான் நேர்மையாக இல்லாமல் கபடமாக அயலாரின் வஸ்துவை க்ரஹித்துள்ளேன்- எடுத்துள்ளேன், இதுபோல் அயலாருக்கு கொடுக்கவேண்டியதை  கொடாமல் நானே நன்கு அனுபவித்துள்ளேன், அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,
 
यन्मयि माता गर्भे सति। एनश्चकार यत्पिता। अग्निर्मा तस्मादेनसः।
 
8, நான் எனது தாயின் கர்பத்தில் வாசம் செய்யும் காலத்தில் எனது தாய் வேறுபுருஷர்களுக்கு ஸேவை செய்வது முதலான பாபத்தை செய்தாளோ, அதுபோல் எனது தந்தையும் சாஸ்த்ரநிஷித்ததினத்தில் மைதுனாதி பாபத்தை செய்தாரோ, அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும், (இதுதான் போலும் மாதாபிதாக்கள் செய்வது மக்களுக்கு வரும் என்பது.ஆக மாதா பிதாக்கள் தவறு செய்தால் பாபம் பிள்ளைகளுக்கு வரும் என்பதாகிறது)
यदापिपेष मातरं पितरम्। पुत्रः प्रमुदितो धयऩ्.। अहिंसितौ पितरौ मया तत्। तदग्ने अनृणो भवामि।।
9.நான் குழந்தை பருவத்தில் ஸந்தோஷத்தால் தாய்பால்குடிக்கும் ஸமயத்தில்  தாயை ஹிம்ஸித்திருப்பேன், இதுபோல் தகப்பனையும் கை மற்றும் கால்களினால் உபத்ரவித்தித்திருப்பேன், ஆயினும் அவர்கள்  அதை ஹிம்ஸையாகவும் உபதக்ரவமாகவும் நினைத்திருக்கமாட்டார்கள், ஆயினும் அவர்கள் விஷயத்தில்  ப்ரத்யுபகாரம் செய்யமுடியாததால் கடனாளியாக உள்ளேன், அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும், நான் கடனில்லாதவனாக ஆகக்கடவேன்.
 
यदन्तरिक्षं पृथिवीमुतद्याम्। यन्मातरं पितरं वा जिहिंसिम। अग्निर्मा तस्मादेनसः।
 
 10.மூன்று லோத்தில் உள்ளவர்களுக்கும்  மாதாபித்ருக்களுக்கும் விருப்பமில்லாததான ஹிம்ஸையை செய்துள்ளேன், அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,
   
यदाशसा निशसा यत्पराशसा। यदेनश्चकृमा नूतनं यत्पुराणम्। अग्निर्मा तस्मादेनसः।
 
11, நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகவும் கொடுமையானதும் ஹிம்ஸையை செய்துள்ளேன், இதுபோல் தற்சமயத்தி்ல  முன்காலத்தில்  நிறைய பாபத்தை செய்துள்ளேன், ஹே அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,
 
अतिक्रामामि दुरितं यदेनः। जहामि रिप्रं परमे सधस्थे। यत्र यन्ति सुकृतो नापि दुष्कृतः। तमारोहामि सुकृत्न्नु लोकम्।
 
12,துர்கதிக்கு காரணமான பாபத்தை  அக்னியின் அனுக்ரஹத்தால் கடப்பவனாவேன்,வித்வத்ஸபை முதலிய உயர்ந்த ஸ்தானத்தில்  செய்யப்பட்ட பாபத்தின் நின்றும்  அக்னியின் அனுக்ரஹத்தால் விடுபட்ட பிறகு, புண்யம் செய்தவர்கள் எந்த லோகத்துக்குச்செல்கிறார்களோ ,பாபம் செய்தவர்கள் எங்கு செல்வதில்லையோ அப்படிப்பட்ட புண்யம் செய்தவர்கள் செல்லும்  லோகத்துக்கே மிகவும் வேகமாக ஏறுவேன்,
त्रिते देवा अमृजतैतदेऩः। त्रित एतन्मनुष्येषु मामृजे। ततो यदिकिञ्चिदानशे। अग्निर्मा तस्मादेनसः। गार्हपत्यः प्रमुञ्चतु। दुरिता यानि चकृम। करोतु मामनेनसम्।।
 
 
13,முன்பு தேவர்கள் நெல்லை குத்தி அதில் நின்றும் அரிசியை தயார் செய்து
அதை இடித்துமாவாக்கி ஹவிஸ்ஸை உண்டாக்கிய பின் அவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது, அதாவது விதையை நாசம் செய்ததால் உண்டான பாபாத்தை எவரிடத்தில் கொடுப்பது  என,,அங்கு அக்னிதேவன் என்னிடம் உங்களின் வீர்யத்தை கொடுங்கள், நான் உங்களுடயபாபத்தை தரிப்பவனை உண்டாக்குகிறேன் என, அக்னிதேவன் கூறியபடியே தேவதைகள் தங்களின் சரீரத்தை அவனிடம் கொடுத்தார்கள், அவன் எல்லோருடய வீர்யத்தை தரிக்கிற அங்காரனால் அப்-ஜலமாகிற தேவதையிடம் வீர்யத்தை கொடுத்தான்.அதிலிருந்து ஏகதன் என்ற பெயருடன் ஒருவன் உண்டானான், அவனிடத்தில் இதை கொடுக்க,அவன் த்விதன் என்பவனிடம் கொடுக்க, அவன் த்ரிதனிடம் கொடுக்க, இப்படியாக பாபத்தை தேவர்கள் ஜலத்தில் நின்றுமுண்டானவரிடம் கொடுக்க, ஜலத்தில் நின்றுமுண்டானவர்கள் அதை ஸூர்யோதயகாலத்தில் தூங்குபவனிடம் –ஸூர்யபாபயுதிதே, சேர்த்தான், அவன் ஸூர்யாஸ்தமனகாலத்தில்  தூங்குபவனிடத்தில்-ஸூர்யாபிநிம்ருக்தே
சேர்த்தான்,, ஆதலால் ஸூர்யோதயகாலத்தில் மற்றும் ஸூர்யாஸ்யமனகாலத்தில்  தூங்ககூடாது என்பர், காரணம்  முன்பு சொன்ன பாபத்தை அவர்களிடம் சேர்த்துவிடுவார்கள்
அவன் கோனலான நகத்தை உடையவனிடம் சேர்த்தான், அவன் காரையுடன் கூடிய பல்லை உடையவனிடம் சேர்த்தான், அவன் அக்காளிருக்க தங்கையை மணந்தவனிடம் -அக்ரதிதிஷுஃ சேர்த்தான், அவன் விவாஹம் செய்த தம்பியிருக்க விவாஹமாகாத ஜ்யேஷ்டன்-பரிவித்தன் இடம் சேர்த்தான், அவன் க்ஷத்ரியனை கொல்பவனிடம் அந்த பாபத்தை சேர்த்தான், அவன் ப்ராஹ்மணணை கொல்பவனிடம் சேர்த்தான்,  இந்த பாபம் அவனை விட்டு நீங்கவில்லை, காரணம், ஜலமானது தாழ்வான இடத்தையே சென்றடையும், அதுபோல் முன்பு கூறின பாபங்களில் மிகவும் கொடியது-தாழ்ந்தது ப்ரஹ்மஹத்தியாகும் , ஆதலால் அங்கு சென்றது, அதைவிட தாழ்வானது வேறு இல்லாததால் அங்கேயே நின்றுவிட்டது என வேறு இடத்தில் கூறப்பட்டுள்ளது.
 இப்படி த்ரிதனிடத்தில் தேவர்கள் சேர்ப்பித்த பாபத்தை த்ரிதன் முன்பு கூறின
மனுஷ்யர்களில் சேர்த்தான்,  அதி்ல் நின்றும்  சிறிது ஏதாவது  என்னை அடைந்திருக்கலாம், ஹே அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,
 
दिवि जाता अफ्सु जाताः। या जाता ओषधीभ्य़ः। अथो या अग्निजा आपः। तानश्शुन्धन्तु शुन्धनीः।।
14.த்யுலோகத்தில் உண்டானதும், கிணறுகளில் உண்டானதும், ஓஷதிகளில் நின்றும் உண்டானதும், மின்னலில் நின்றுமுண்டானதாய் எல்லா வஸ்துவையும் பரிசுத்தமாக்குகிற ஜலங்கள் எங்களை சுத்தமாக்கட்டும்.
 
यदापो नक्तं दुरितं चराम। यद्वा दिवा नूतनं यत्पुराणम्। हिरण्यवर्णास्तत उत्पुनीत नः।
15.ராத்ரியில் மற்றும் பகலில் செய்யப்பட்டதும், முன்பு செய்ததும் தற்சமயம் செய்ததுமான எல்லா பாபத்தில் நின்றும் ஹே தங்கவர்ணத்தில்
தேஜஸ்ஸோடு கூடின  ஹே ஜலங்களே,நீங்கள் எங்களை பரிசுத்தமாக்கவேணும்.
 इमं मे वरुण श्रुधी हवमद्या च मृडय। त्वामवस्युराचके।
16, ஹே வருணதேவனே, என்னுடய ஆஹ்வானத்தை கேளாய், கேட்டபிறகு எங்களை ஸுகமாக இருக்கச்செய்யவும், என்னை ரக்ஷிக்கவேண்டி விரும்பி
உன்னை எல்லா திசையிலும் ப்ரார்த்திக்கிறேன்.
तत्वायामि ब्रह्मणा वन्दमानस्तदाशास्ते यजमानो हविर्भिः।अहेडमानो वरुणेह होध्युरुश्स मा न आयुः प्रमोषीः।।
17.என்னுடய ரக்ஷணத்தின் பொருட்டு மந்த்ரத்தால் ஸேவிப்பவனாய் உன்னை அடைகிறேன்.இந்த யஜமானன் ஹவிஸ்ஸுகளால் ஆராதித்து ரக்ஷணத்தை ப்ரார்த்திக்கிறான், ஹே வருணதேவனே, கோபமில்லாதவனாய் இந்த கர்மாவில் எங்களின் வி்ஞ்ஞாபநத்தை  அறிவாயாக,மிகுந்த தபஸ்ஸோடுகூடியவனே, எங்களுடய ஆயுஸ்ஸை நாசம் செய்யாதே.
त्वं नो अग्ने वरुणस्य विद्वान् देवस्य हेडोवयासिसीष्ठाः। यजिष्ठो वह्नितमस्शोशुचाऩो विश्वा द्वेषांसि प्रमुमुग्ध्यस्मत्।
18,ஹே அக்னியே, நீ எங்களுடய பக்தியை  அறிபவனாய் வருணனுக்கு எங்கள்விஷயத்திலுள்ள கோபத்தை போக்குவாயாக, யாகத்தை நன்கு செய்பவனாய் ,தேவர்களின் ஹவிஸ்ஸை வஹிப்பவனாய்,  ப்ரகாசத்தோடு கூடியவனாய் இருந்து கொண்டு விரோதிகளால் செய்யப்பட்ட எல்லா த்வேஷங்களையும்  எங்களிடமிருந்து போக்குவாயாக.
 सत्वं नो अग्नेवमो भवोती नेदिष्ठो अस्या उषसो व्युष्टौ। अवयक्ष्व नो वरुणं रराणो वीहि मृडीकं सुहवो न एधि।
19,ஹே அக்னிதேவனே, அப்படிப்பட்ட நீ  எங்களுக்கு ரக்ஷகனாக இரு, ப்ராதஃகாலத்தில் ஸமீபத்தில் நின்று வருணனால்  செய்யப்பட்டதாய் எங்களின் அபீஷ்டங்களை தடுப்பதான பாபங்களை நாசம் செய்வாயாக,ஸந்தோஷத்துடன் ஸுகஸாதனமான நாங்கள் ஸமர்ப்பிக்கும் ஹவிஸ்ஸை சாப்பிடுவாயாக, எங்களால் ஸுகமாக கூப்பிடத்தகுந்தவனாக இரு.
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here