Thula Kaveri Maahaathmyam – Part 1

1
4,822 views

Srirangam_Kaveri

From the mid of October month, the holy month of Thula (Aippasi in Tamil) starts and Thula Kaveri Snanam is an important religious occasion in this month. This article describes in detail about Thula Kaveri Maahaathmyam and will be beneficial for for those who plan to take dip in Holy Kaveri during Thula and equally too to those who can offer mAnasIka prayer to the river who can’t make it personally to the river during this month.

This article is written by Sri U.Ve. sArasAragnar mahAmahOpAdhyAya perukkAraNai mAdabushi chakravarthyAchArya swAmi.

பூலோக வைகுண்டம் எனப்பெறுவது ஸ்ரீரங்கம். அங்கே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளான் அரங்க நகரப்பனான ஸ்ரீரங்கநாதன். அவன் இஷ்வாகு குலதனம் சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீராமபிரானால் ஆராதிக்கப் பெற்றவன். அவனை ஆழ்வார்கள் அனைவரும் பாடி மகிழந்துள்ளனர். அவனைப் போலவே அவனை அணைந்து மாலை போல் அவனடி வருடி செல்கிறாள் பொன்னி எனப் புகழ் பெற்ற காவிரித் தாய்.

ஸ்ரீரங்கநாதனைப் போலவே மஹிமை வாய்ந்தவள் காவிரி நதி என்று கூறுகின்றன புராணங்கள். அதிலும் துலா மாதத்தில் காவேரி ஸ்நானம் மிகவும் உத்க்ருஷ்டமானது என்று சொல்லியிருக்கிறது.

துலா காவேரி மாஹாத்ம்யம் புராணத்தில் உள்ளபடி ஸங்க்ரஹமாக இங்கு எழுதப் பெறுகிறது.

முன்னொரு காலத்தில் நிசுளாபுரம் என்ற பட்டணத்துக்கு அரசரான தர்மவர்மா, பாகவதோத்தமரான தால்ப்யர் என்ற மஹர்ஷியைப் பார்த்து, “முக்காலத்தையும் அறிந்தவரான முநிச்ரேஷ்டரே, மனிதர்கள் இந்த கலியுத்தில் எந்த விதமான ஸத்கார்யத்தைச் செய்தால் ஸுகமாக வாழ்வார்கள்? எதைச் செய்தால் பாவங்கள் தொலையும் ? எதைச் செய்தால் ஸ்ரீமந்நாராயணன் ஸந்தோஷத்தை அடைவான்? எதைச் செய்து ஸத்ஸந்ததியைப் பெற்று மகிழ்வர்? இவை அனைத்தையும் தேவரீருடைய சிஷ்யனான அடியேனுக்கு விஸ்தாரமாக அருளிச் செய்ய வேண்டும்” என்று சொன்னார்.

இதைக் கேட்ட தால்ப்யர், “அரசனே, நல்ல விஷயங்களை அறிய விரும்பிய உன் ஆசை போற்றத்தக்கதே. ஆகையால் மங்கள ப்ரதமான விஷயத்தை உனக்குச் சொல்லுகிறேன். முன்பு குருக்ஷேத்ரத்தில் ஹரிச்சந்த்ர மஹாராஜாவினால் ப்ரார்த்திக்கப் பெற்ற அகஸ்த்ய மஹர்ஷி அருளிச் செய்ததை நான் உனக்குக் கூறுகிறேன்; கவனமாகக் கேள்” என்று சொல்லலானார்.

முன்பு ஒரு ஸமயம் அயோத்தி மாநகரத்துக்கு அதிபதியான ஹரிச்சந்த்ரன் குருக்ஷேத்ரத்துக்குச் சென்றான். அங்கு வஸித்துவந்த ஸெளநகாதி முனிவர்களை வணங்கி உபசரித்தான். அவர்களும் இவ்வரசனை முறைப்படி வரவேற்று உபசாரங்களைச் செய்தனர். பிறகு அரசனைப் பார்த்து, “உனக்கு நல்வரவு கூறுகிறோம். நீ ராஜ்யத்தை நல்ல முறையில் ஆண்டு வருகிறாயா? உன் நகரம், கோசம் (பொக்கிஷம்), ஸேனை இவை பூர்ணமாக உள்ளனவா? எதிரிகளை வென்று, ஜயசீலனாக விளங்குகிறாயா?” என்றெல்லாம் வினவினார்கள்.

அரசன், “தவச்ரேஷ்டர்களான தேவரீர்களுடைய அநுக்ரஹத்தினால் எல்லாம் நலமே. குறை ஏதுமில்லை. தேவரீர்களுடைய தர்சன விசேஷத்தினால் பரிசுத்தனாக ஆகிவிட்டேன். ஆயினும் நான் ஒரு ஜிஜ்ஞாஸுவாக இங்கு வந்துள்ளேன். அடியேனை அநுக்ரஹிக்க வேண்டும். எந்த உபாயத்தை அநுஷ்டித்தால் இந்த ஸம்ஸாரமாகிற கடலைத் தாண்ட முடியும்? மோக்ஷத்தை அடைய மார்க்கம் எது? புருஷோத்தமனான ஸ்ரீமந்நாராயணனை எதைச் செய்து ஸந்தோஷமடையச் செய்வது? ஸர்வஜ்ஞர்களான தேவரீர்கள் இதற்கான வழி முறைகளை அடியேனுக்கு உபதேசித்தருள வேண்டும்” என்று ப்ரார்த்தித்தான்.

மஹர்ஷிகள், “அரசே, நற்குலத்தில் உதித்தவனான நீ நல்ல கதியை அடைந்திட விரும்புவது இயற்யையே. ‘அஸ்வமேதம்’ என்ற உயர்ந்த மஹாயஜ்ஞம் ஒன்று உள்ளது. அதைச் செய்தால் பாவங்கள் தொலைந்து போம். நற்கதியையும் அடையலாம்” என்றனர்.

ஹரிச்சந்த்ரன், “ரிஷிச்ரேஷ்டர்களே, மிகவும் ஸந்தோஷம். உயர்ந்த அந்த யாகத்ைத் தெவரீர்களே முன்னின்று நடத்தி வைத்து அடயேனை அநுக்ரஹிக்க வேண்டும்.” என்றான்.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது நைமிஷாரண்யவாஸிகளான வஸிஷ்டர் வாமமேவர் முதலான மஹர்ஷிகள் பெளராணிகரான ஸூதரை முன்னிட்டுக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தனர். குருக்ஷேத்ரவாஸிகளான மஹர்ஷிகள் அவர்களை, அதிதிகளை உபசரிக்கும் முறைப்படி வரவேற்று வணங்கி, ஆஸநங்களில் அமரச் செயதனர். வந்தவர்கள் அமர்ந்ததும் ஹரிச்சந்த்ரன் அவர்களை ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். பிறகு ஸெளநக மஹாமுனிவர் அங்கு வந்த மஹர்ஷிகளைப் பார்த்து, “தவச்ரேஷ்டர்களே, அயோத்யாதிபதியான இவ்வரசன் அச்வமேத யாகத்தைச் செய்ய விரும்புகிறான். யத்ருச்சையாக எழுந்தருளியுள்ள தேவரீர்கள் அந்த வேள்வியைச் செய்து முடித்து இந்த அரசனை அநுக்ரஹிக்கப் ப்ரார்த்திக்கிறேன்.” என்றார்.

Srirangam_Kaveri_1இதைக் கேட்ட நாரதரும் அகஸ்த்யரும், “ஸெளநகரே, ஹரிச்சந்த்ரன் உயர்குடியிற் பிறந்தவனே. யாகம் செய்வதற்கும் தகுதி பெற்றவன்தான். நல்ல அறிவாளியும் ஜிதேந்த்ரியனாகவுங்கூட இருக்கிறான். ஆயினும் இவனிடம் ஒரு குறை உண்டு. அதாவது முன்பு ஒரு ஸமயம் இவ்வரசன் விச்வாமித்ரருக்குக் கடன்பட்டவனாக ராஜ்யத்திலிருந்து சென்று வனத்தில் வஸித்து வந்தான். அப்பொழுது ஒரு நாள் பசியினாலும் தாகத்தினாலும் பீடிக்கப்பட்டவனாய் அலைந்து திரிந்தான். அவன் செல்லும் வழியில் ‘கிந்தமர்’ என்ற முனிவர் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டும், பசியினாலும் தாகத்தினாலும் தன் வசமிழந்திருந்த இவன் அவரை வணங்காமலும் நல்ல வார்த்தை ஒன்றையும் சொல்லாமலும் சென்றான். இதைக் கண்ட அந்த மஹர்ஷி ‘இவன் ஹரிச்சந்த்ர அரசன்’ என்பதை உணர்ந்தார். ‘மஹாதர்மிஷ்டனாயும், உதாரனாயும், அதிதிபூஜையில் வல்லவனாயும் உள்ள இவன் இன்று நம்மைக் கண்டும் காணாதவன் போல் போகிறானே. என்ன காரணமாக இருக்கும்?’ என்று ஆலோசித்தார். உடனே அவருக்கு அரசனுடைய நிலை தட்டென விளங்கியது. ‘தன்னுணர்வு இழந்ததனாலேயே இப்படி நேரிட்டது. இது இவன் ஸ்வயபுத்தியுடன் செய்த தவறு அல்ல’ என்று நினைத்துச் சும்மா இருந்துவிட்டார்.

“அவர் சும்மா இருந்துவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ இவன் ப்ராஹ்மண ச்ரேஷ்டரான மஹர்ஷியை அவமதித்துவிட்டான். அந்தப் பாவம் இந்த அரசனிடத்தில் உள்ளது. அதற்கான ப்ராயச்சித்தத்தைச் செய்து கொண்டாலல்லது இவன் யாக தீக்ஷை செய்துகொள்ள அதிகாரமற்றவனே. எவனோருவன் மநோ வாக் காயங்களால் ப்ராஹ்மணனை அவமானப்படுத்துகிறானோ அவனுடைய ஆயுள் ஐச்வர்யம் முதலியவை உடனே நாசத்தை அடைகின்றன. பித்ருக்களும் அவனை வெறுக்கின்றனர். அறியாமல் செய்த பிழையானால் ப்ராயச்சித்தம் செய்து போக்கடிக்கலாம். அறிந்து பிழை செய்வானேயாகில் அவன் ப்ரஹ்மரக்ஷஸ்ஸாகப் பிறந்து அல்லற்படுவான் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ஆதலால் இவன் அறியாமல் அபசாரப்பட்டுள்ளான். அந்தப் பிழையைப் போக்கடித்த பிறகே இவனுக்கு யாகம் செய்யத் தகுதி உண்டாகும். அந்தப் பாவத்தைப் போக்கிட இவன் துலா (ஐப்பசி) மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்தோ அல்லது சித்திரை மாதத்தில் நர்மதா நதியில் ஸ்நானம் செய்தோ தீர வேண்டும். அப்படிச் செய்தால் இவனுடைய பாவம் தொலைந்து, யஜ்ஞம் செய்ய அர்ஹனாக ஆவான்.
“மேலும், துலா மாதத்தில் காவேரிநதியில் எல்லாப் புண்ய தீர்த்தங்களும் சேர்ந்திருக்கின்றன. அந்தக் காவேரி தன்னில் ஸ்நானம் செய்தவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கடிக்கிறது. அவர்கள் விரும்பும் பலன்களைக் கொடுக்கிறது. மோக்ஷ ஸாமராஜ்யத்தையும் கொடுக்கும் தன்மையுடையதாக விளங்குகிறது. ஸகல யாகங்களுடைய பலன்களயும் கொடுக்க வல்லது. பதிநான்கு லோகங்களிலும் உள்ள அறுபத்தாறு கோடி புண்ய தீர்த்தங்களும் தங்கள் பாவங்களைப்போக்கிக் கொள்ளத் துலா மாதத்தில் காவேரியை வந்து அடைகின்றன. ஆயிரம் முகங்களுடன் கூடிய ஆதிசேஷன் பதினாயிரம் வருஷகாலம் உரைத்தாலும் காவேரியின் மஹிமையைப் பூர்ணமாகச்சொல்ல முடியாது. துலா மாதத்தில் காவேரியில் ஒருவன் மூன்று தினங்கள் ஸ்நானம் செய்து அங்கு வஸிப்பானேயாகில் அவன் செய்த ஸகல பாபங்களும் போய்க் கடைசியில் மோக்ஷத்தை அடைவான்.

“ஸஹ்ய பர்வதத்திலிருந்து ஸமுத்ர பர்யந்தம் செல்லும் காவேரியின் இரு கரைகளிலும் அநேக விஷ்ணு க்ஷேத்ரங்களும் சிவ க்ஷேத்ரங்களும் மஹர்ஷிகளின் ஆச்ரமங்களும் விளங்குகின்றன. காவேரி நதியின் ப்ரவாஹத்திலுள்ள அலைகள் பல புண்ய நதிகளாகவும், அதிலுள்ள சுழல்கள் அநேக புண்ய தீர்த்தங்கள் (அநந்தஸரஸ், ஹ்ருத்தாபநாசன ஸரஸ், ஸ்வாமி புஷ்கரிணி போன்றவை) ஆகவும், அங்குள்ள மணல்கள் ஸகல தேவதைகளாகவும் வர்ணிக்கப் பெற்றுள்ளன. ஆகையினாலேயே அதற்கு அவ்வளவு மஹிமை உள்ளது. ஆதலால் ஹரிச்சந்திர மஹாராஜாவே, நீயும் துலா மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய். உன் பாவங்கள் தொலையும் நீயும் பரிசுத்தனாக ஆவாய். உன் மனோரதமும் பூர்த்தியடையும்” என்று கூறினார்கள்.

நாரதரும் அகஸ்த்யரும் அருளியவற்றைக் கேட்ட ஹரிச்சந்த்ரன் மிகவும் ஆச்சர்யமடைந்தான். அந்த மஹரஷிகளைப் பார்த்து அவன், “ஸ்வாமிகளே, அடியேன் தேவரீர்களுக்கு அடியவன். தேவரீர்களோ கருணையுள்ளவர்கள். உங்களுடைய உபதேசப்படியே செய்ய ஸித்தமாக இருக்கிறேன். எப்படியாவது நான் அச்வமேத யாகத்தைச் செய்ய வேண்டும். துலா மாதத்தில் காவேரி நதியில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று அருளிச் செய்தீர்கள். ஸ்நானம் செய்யும் முறைகளையும் அதன் பலன்களையும் கூறுங்கள். எல்லா மாதங்களைக் காட்டிலும் துலா வைசாக மாதங்கள் எப்படி உயர்ந்தவையாக ஆகின்றன? எந்தத் தானத்தைச் செய்ய ேண்டும்? இவற்றையும் க்ருபை கூர்ந்து அருளிச் செய்ய வேண்டும்” என்றான்.

இப்படி ஹரிச்சந்த்ரன் கேட்டதற்கு அகஸ்த்யர், “அரசனே, நன்கு கேட்டாய். துலா காவேரி மாஹாத்ம்யத்தில் ஓர் அத்யாயத்தையோ ஒரு ச்லோகத்தையோ எவனோருவன் பாராயணம் செய்கிறானோ அல்லது கேட்கிறானோ அவன் நிச்சயமாக ஸ்ரீவைகுண்டத்தை அடைவான். அவனுடைய பிறவி பயனுள்ளதாக ஆகும். பூர்வ ஜந்மத்தில் செய்த புண்யத்தின் பலனாக உனக்கு இந்த ஸாதுக்களுடன் ஸ்நேஹம் ஏற்பட்டது. ஸத்துக்களுடைய ஸங்கத்தினால் புண்யகதையில் அபிருசி ஏற்பட்டுள்ளது. ஸத்கதாச்ரவணத்தால் மநோ வாக்காயங்களால் ஏற்பட்ட பாவங்கள் அழிகின்றன. பாவங்கள் எதாலைந்தால் மனஸ் பரிசுத்தமாகிறது. மனஸ் பரிசுத்தமாக ஆனால் பகவானுடைய ஸ்மரணம் ஏற்படுகிறது. பகவானை த்யானித்தால் அவன் நல்ல கதியை அடைவிக்கிறான். ஆகையால் எப்போதும் நீ ஸத்ஸங்கத்தில் விசேஷ ச்ரத்தை கொண்டவனாகவே இருக்க வேண்டும்” என்று சொல்லலானார்.

காவேரியின் மஹிமையை உனக்கு விஸ்தாரமாகக் கூறுகிறேன். காவேரி ஜலம் அனைத்தும் புண்ய தீர்த்தமயமானது. காவேரியிலுள்ள கற்கள் அனைத்தும் ப்ரஹ்ம விஷ்ணு சிவ தேவதா ரூபமானவை. அங்குள்ள மணல்கள் இதர தேவதைகள். ஆகையாலேயே காவேரி இதர நதிகளைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கூறப்பெற்றுள்ளது. துலா மாதத்தில் இதர நதிகளும் புண்ய தீர்த்தங்களும் காவேரியில் செர்ந்து விளங்குகின்றன. ஆதலால் அப்போது ஸ்நானம் செய்பவர்கள் பஞ்ச மகா பாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். அதில் ஸ்நாநம் செய்தவர்கள் அச்வமேத யாகம் செய்த பலனையும் அடைகின்றனர்.

Srirangam_Kaveri_2துலா மாதத்தில் காவேரிக் கரையில் எவனோருவன் பித்ருக்களை உத்தேசித்து ச்ராத்தம், பிண்டதானம், தர்ப்பணம் இவற்றைச் செய்கிறானோ அப்படிச் செய்யப்பெற்ற அவை கல்ப கோடி வர்ஷபர்யந்தம் பித்ருக்களை த்ருப்தி செய்விக்க வல்லவையாகின்றன. ப்ரஹ்மா முதலான ஸகல தேவர்களும், ஸரஸ்வதி, கெளரி, லக்ஷ்மி, இந்த்ராணி முதலியவர்களும் அப்ஸர ஸ்த்ரீகளும் துலா மாதத்தில் ஸ்நாநம் செய்ய விரும்பி வருகின்றனர். காவேரிக் கரைகளில் பிறந்து வளர்ந்த பசு பக்ஷி முதலானவையும் அதன் காற்றினால் பரிசுத்தங்களாக ஆகி, மோக்ஷத்தை அடைகின்றன என்றால் பக்தி ச்ரத்தையுடன் ஸ்நானம் செய்தவர்கள் அடையும் பலனைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

மேலும் மஹான்களின் பெருமை, துளஸியின் மஹிமை, கங்கையின் ப்ரபாவம், துளஸியைக் கொண்டு செய்யப்படும் அர்ச்சனையின் வைபவம், ஸாளக்ராமத்தின் ஆராதன மஹிமை, காவேரியின் பெருமை இவற்றை உபதேசிக்கக் கேட்பவர்கள் மஹாபாக்கியசாலிகள். ஐந்மாந்தரங்களில் புண்யம் செய்தவர்களே காவேரியைக் காணும் பாக்கியத்தையும் அதில் ஸ்நாநம் செய்ய யோக்யதையையும் பெற்றவர்களாக ஆகின்றனர். ஸாமான்யமானவர்களுக்கு இது கிட்டாது. நதிகளில் மஹாவிஷ்ணுவின் திருவடியிலிருந்து உண்டான கங்கை எப்படி உயர்ந்ததோ, புஷ்பங்களில் துளஸி எவ்வாறு மேற்பட்டதோ, வ்ரதங்களுக்குள் ஏகாதசி வ்ரதம் எப்படி உயர்ந்ததாக உள்ளதோ, க்ருஹஸ்தர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களுள் பஞ்ச மஹாயஜ்ஞங்கள் எவ்வாறு உயர்ந்தவையோ, சுத்திகளுக்குள் மநஸ்ஸுத்தி எப்படி உயர்ந்ததோ, தேவதைகளுள் ஸ்ரீமந்நாராயணன் எவ்வாறு உயர்ந்தவராக விளங்குகிறாரோ, அக்ஷரங்களுக்குள் ஓங்காரம் எவ்வாறு உயர்ந்ததோ, வேதங்களுள் ஸாமவேதம் எப்படி உயர்ந்ததாகக் கருதப் பெறுகிறதோ, பதினோரு ருத்ரர்களுக்குள் சங்கரம் எப்படி உயர்ந்தவராக உள்ளாரோ, ப்ராஹ்மண ஸ்த்ரீகளுள் அருந்ததி எவ்வாறு மேம்பட்டவளோ, ஸ்த்ரீகளுக்குள் மஹாலக்ஷ்மி எப்படி உயர்ந்தவளோ, தானங்களுக்குள் அந்நதானம் எப்படி உயர்ந்ததோ அதேபோல் நதிகளுக்குள் உயர்ந்தது காவேரி நதி என்று புராணங்கள் கூறுகின்றன.

காவேரியை நினைத்த மாத்ரத்தில் மனிதன் பரிசுத்தனாக ஆகிறான். கர்மபூமி என வழங்கும் இந்தப் பாரத தேசத்தில் பிறந்த ப்ராஹ்மணனோ, க்ஷத்ரியனோ, வைச்யனோ, வேளாளனோ யாரானாலும் காவேரியில் ஸ்நாநம் செய்யாதவனுடைய ஜன்மம் வீணானதே. முக்யமாக எவனோருவன் துலா மாதத்தில் காவேரியில் ஸ்நாநம் செய்கிறானோ அவன் மோக்ஷத்தை அடைகிறான் என்பதில் எள்ளளவும் ஸம்சயமே இல்லை. மெளனியாக எவனோருவன் ஸ்நாநம் செய்கிறானோ அவனுடைய ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்கள் அனைத்துமே போய்விடுகின்றன என்றால், நியமத்துடனும் வ்ரதத்துடனும் ஸங்கல்ப பூர்வமாக ஸ்நாநம் செய்பவர்களுக்கு ஏற்படக் கூடிய பலன்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

விடியற்காலையில் எழுந்திருந்து பகவானை த்யானிக்க வேண்டும். நியமப்படி காவேரியில் ஸ்நானம் செய்ய வேண்டும். ஸந்த்யாவந்தநாதிகளை முடித்துக்கொண்டு ஸ்ரீரங்கநாதனை ஸேவிக்க வேண்டும். பிறகு எல்லாருமாக ஒன்று சேர்ந்து ஒரு பெளராணிகரை (புராணம் சொல்லும் ப்ராஹ்மணச்ரேஷ்டரை) வணங்க வேண்டும். அவருக்கு வேண்டிய ஸெளகர்யங்களைச் செய்து கொடுத்து உபசரிக்க வேண்டும். அவரை ஓர் உயர்ந்த ஆஸனத்தில் இருக்கச் செய்து பக்தி ச்ரத்தையுள்ளவர்களாக அவரிடம் அமர வேண்டும். அவரைப் பார்த்து, “ஸ்வாமிந், துலா காவேரியின் மஹிமையை அடியோங்களுக்கு உபதேசிக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்க வேண்டும். பிறகு அவருடைய உபதேசத்தை ஸாவதானமாகக் கேட்க வேண்டும். இப்படி நியமத்துடன் நடந்தால் மோக்ஷம் கிடைக்கும்.

To be continued…

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here